×

குடியாத்தத்தில் அதிர்ச்சி சம்பவம் 200 கூலிக்காக குடும்பத்துடன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த தொழிலாளி

குடியாத்தம்:  குடியாத்தத்தில் 200 கூலிக்காக பாதுகாப்பு உபகரணங்களின்றி குடும்பத்தினருடன் தொழிலாளி ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலகம் உள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் உள்ள கால்வாய்களில் செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் போலீஸ் நிலையம் அருகே செல்லும் 7 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளியப்பன்(57) என்பவர், தனது மனைவி மற்றும் 18 வயது மகள், 4 வயது மகனுடன் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் எஸ்ஐ சிலம்பரசன் அங்கு சென்று விசாரித்தார். அப்போது, தொழிலாளி தனது குடும்பத்தினரின் வயிற்றுப்பிழைப்புக்காக 200 ரூபாய் கூலிக்கு இப்பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதற்கு எஸ்ஐ, ‘பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கால்வாயில் இறங்கி இதுபோன்று செய்யக்கூடாது’ என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொழிலாளியை கால்வாயில் சுத்தம் செய்யும்படி கூறியவர்கள் யார்? என குடியாத்தம் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post குடியாத்தத்தில் அதிர்ச்சி சம்பவம் 200 கூலிக்காக குடும்பத்துடன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Emirates ,Dinakaran ,
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம்...